இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை


இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த 2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய பல மாணவர்கள் எதிர்பார்த்திருந்ததாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சுமார் 5 வருடங்களாக குறித்த மாணவர்கள் கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு உள்ளீர்க்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த பல வளங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, மாணவ ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் நிறைவடைந்து, அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கத்தின் உப செயலாளர் எஸ்.எம்.பீ. பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.