இலங்கையின் மொத்த கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சென்ற மாத இறுதியில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், சீனாவின் மக்கள் வங்கியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த தொகையினை பயன்படுத்துவதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் (2023) எட்டு மாதங்களில் இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையானது கணிசமான அளவில் குறைந்துள்ளதாக ஓகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்ட நாணயக் கொள்கை மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறைந்த தேவை, இறக்குமதி கட்டுப்பாடுகள், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதியில் ஒப்பீட்டளவில் ஏற்பட்ட சரிவு போன்ற காரணிகளே வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமான மாற்றத்தினை ஏற்படுத்தியிப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் (2023) சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர்களுக்கான பணப்பரிமாற்றங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது, இனி வரும் காலங்களில் இவை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது

அண்மைய மாதங்களில் கணிசமான அளவு வெளியேற்றங்கள் இருந்தபோதிலும், நிகர அந்நிய முதலீட்டு வரவுகள் இந்த ஆண்டில் இதுவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 12 வீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொகைசுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகளாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, இதில் சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று தொகையும் அடங்குகின்றது.