12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு


 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இராஜாங்க  அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. சந்தர்ப்பவாத, அரசியல் கோணத்தில் இருந்து பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மக்களுக்கு சிரமம் உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. வீழ்ச்சியுற்ற நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது. சிரமங்களிலிருந்து விடுபட, முதலில் ஒரு திட்டம் தேவை.

குறுகிய கால சிரமங்கள் இருக்கும். அந்த அசௌகரியங்களைத் தவிர்க்க சமூக நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். செழிப்பைப் பார்க்கும் அதே கண்களால் வறுமையைப் பார்க்காதீர்கள்...

வரி செலுத்த வேண்டிய மக்களை வரி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது.

அவர்கள் கடனைச் செலுத்த வேண்டும். மற்றபடி குறைந்த வரி செலுத்தியோ, வரி கட்டாமல் இருந்தோ வரி அதிகம் என்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை.

பொருளாதார நெருக்கடியால், இந்த நிலையைப் புரிந்துகொள்வது பலருக்கு கடினமாக உள்ளது. நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.