இந்தியாவின் உணவுக்கான கடனுதவியில் இரும்பை இறக்குமதி செய்த இலங்கை! - திண்டாடும் மக்கள்

இந்தியா, இலங்கைக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா வழங்கிய இந்த கடனுதவியில் ஏற்கனவே 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இரும்பு மற்றும் உருக்கு ஆகியவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்தியா வழங்கியுள்ள இந்த கடனுதவியில் இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்படுவதன் பின்னணியில் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட செல்வாக்குமிக்க வர்த்தகர் இருப்பதாக கூறப்படுகிறது.

இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்வதற்காக வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.