கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே!


முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.

இதன் காரணமாகவே சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிபவராக இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நேற்று மாலை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கோட்டபாய ராஜபக்ச நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் பல நாடுகளில் அவருக்கான புகலிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவரால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்கான விளைவினையே இன்று அவர் அனுபவிக்கின்றார். இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றார். 

இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினாலேயே.

அன்று முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் தான் இன்று சிங்கள மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

காலிமுகத்திடலில் இன்று சடலங்கள் கரையொதுங்கும் நிலை காணப்படுகின்றது. சிங்கள மக்கள் கூட இன்று பயந்து நடுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

அன்று தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை தற்போது சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை இந்த நாட்டில் உருவாகியுள்ளது. எனவே தான் தமிழையும் தமிழ் தேசியத்தையும் என்றும் நாம் நேசிக்கின்றவர்களாகவே இருக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த படுகொலையில், 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 வருடங்கள் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்ட இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.

எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.