இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் 32 வருடங்களுக்கு பிறகுதான் உயர் நீதிமன்றம் இவ்வாறானதொரு தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. நான் நினைக்கின்றேன், தற்போது இருக்கும் அரசியல் கலாசாரத்தினால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

அதேபோல நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்கள் தொடர்பான வெறுப்பினையும் மக்கள் தொடர்ச்சியாக காட்டி வருகின்றார்கள். மக்களின் வெறுப்புக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதுதான் இந்த கட்சி மாறும் செயற்பாடு.

மக்களிடம் வாக்குக் கேட்கும் போது ஒன்றை கதைப்பது. வாக்கு கேட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தங்களது அரசியல் இருப்புக்காகவும், சௌகரியங்களுக்காகவும் வசதி வாய்ப்புக்காகவும் பொய்யான காரணம் ஒன்றைக் கூறி கட்சித் தாவுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் நஸீர் அஹமட், கட்சி எடுத்த தீர்மானத்திற்கு முரணான ஒரு தீர்மானத்தை எடுத்தமையின் காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சி எடுத்த தீர்மானம் சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்மானமானது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.