அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டள்ளதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பெரேரா கூறியுள்ளார். 

அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்தல், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிச் சுமையை குறைத்தல் ஆகியவை அந்த 10 நிபந்தனைகளுக்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 5 வருடங்களுக்கு அதிபர் பதவியை பொறுப்பேற்கும் போது, திட்டமிட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதற்கு இன்னும் 286 நாட்கள் இருப்பதாக தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் தமது கட்சியால் விதிக்கப்பட்ட குறித்த 10 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக களமிறங்க தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.