ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது - மிலிந்த மொராகொட



கடந்த ஆண்டு(2022) பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் 2024 அதிபர் தேர்தலில் ராஜபக்சாக்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்சாக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது, அரசாங்கத்தில் ராஜபக்சாக்களின் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர்.

நாங்கள் ஒரு ஜனநாயக நாடு மக்களின் தீர்ப்பே இறுதியானது,  தனிப்பட்ட நபர்களை பூதாகாரமாக்குவது தற்போது விரும்பி முன்னெடுக்கப்படுகின்ற விடயம் ஆனால், இது கேள்விக்கான பதில் இல்லை.

இறுதியில், இது குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் இலங்கை அவ்வாறே இவ்வளவு நாட்களும் செயற்பட்டுள்ளது. கடந்த வருடம் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமைவகித்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை முன்னொருபோதும் இல்லாத வன்முறைகளை சந்தித்தது.

73 வயது அதிபர் 2022 ஜூலை இல் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ச செப்டம்பரில் நாடு திரும்பினார்.

அதேகாலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக்கப்பட்டார். அடுத்தவருடம் நாங்கள் தேர்தல்களை எதிர்கொள்வோம், அடுத்த வருடம் ஓகஸ்ட்டிற்கு பின்னர் அதிபர் தேர்தல்கள் இடம்பெறவேண்டும், தற்போது பொருளாதாரத்தை பலப்படுத்துவது குறித்தே கவனம் செலுத்தப்படுகின்றது.

13வது திருத்தம் உட்பட அதிபரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாடாளுமன்றம் அங்கீகாரத்தை வழங்குகின்றது.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் இடம்பெற வேண்டும், அடுத்த வருடத்தின் இரண்டாவது காலப்பகுதியில் தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனநாயகத்தில் எதனையும் நிச்சயமாக தெரிவிக்க முடியாது ஆனால் இதுவரை இவ்வாறே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதன் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது மே 2022 இல், ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக தீவிரமாக காணப்பட்டன.

அரசாங்கத்தின் பேரழிவு பொருளாதார கொள்கைகளை மாற்றுமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன, ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்சக்களின் மூதாதையர்களின் வீடுகளை கூட தீயிட்டு கொழுத்தினர், ஏனைய அமைச்சர்களின் வீடுகள் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

எங்கள் ஜனநாயகம் இதனை உள்வாங்ககூடியதாகயிருக்க வேண்டும். இதுவே சவால் ஒவ்வொருவரும் தாங்கள் செய்வது சொல்வது சரியென நினைக்கின்றனர்.

ஒருவரின் வீடுகளை எரிப்பதோ அல்லது கொலை செய்வதோ சரியான விடயமில்லை. தலைவர்களுக்கு இதனை எவ்வாறு கையாள்வது என்பது தெரிந்திருக்க வேண்டும், இலங்கை ஒரு சிறிய நாடு இவ்வாறான விடயங்களுக்கு தீர்வை காணமுடியும் என நாங்கள் நினைக்ககூடும்.

ஆனால் தீர்வு இதுவரை எங்களிடமிருந்து தவறியுள்ளது, நாங்கள் மிக மோசமான வன்முறை வரலாற்றை கொண்டுள்ளோம்.

75 வருடங்களாக நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டோம் கிளர்ச்சிகளை எதிர்கொண்டோம் ஆகவே நாங்கள் தீர்வுகளை காணவேண்டும். ஆனால் அவை புரட்சிகளின் மூலம் ஏற்படும் தீர்வுகள் இல்லை புரட்சிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றார்.