உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை எனகொழும்பு மறை மாவட்டத்திற்கான தகவல்தொடர் இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை சிரில்காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஜூட் தனது தனிப்பட்ட கருத்தினையே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை
இலங்கை கத்தோலிக்க திருச்சபையும், உலகளாவிய திருச்சபையும் மரணதண்டனையை ஏற்றுக்கொள்வதில்லை
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நிலாந்த ஜெயவர்த்தன பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்குறித்த விசாரணையின் மூலம் மேலும் பல விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கின்றோம்
சிஐடியின் இயக்குநராக ஷானி அபயசேகரவையும்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவிசெனிவிரட்னவையும் நியமிக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 2020இல் பதவி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும், என்பதே கர்தினாலின் விருப்பம்
அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்