அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு- 06 பேர் பலி!

அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) சிகாகோவின் வடக்குக் கரையில் சுமார் 30,000பேர் வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஹைலேண்ட் பார்க் பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அமெரிக்கா உருவான 246ஆவது ஆண்டு தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.அணிவகுப்பு ஆரம்பமான 10 நிமிடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் குறைந்தது 25 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வயது 18 – 20 வரை இருக்கும் என்றும், அவர் ஒரு கட்டடத்தில் நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.