போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கெளரவித்த இந்தியா! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஒகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வை கண்டித்தமையை நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 137 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தையும், சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தொகுத்துள்ளது

இந்தநிலையில் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள இந்திய இராணுவம், போர்க்குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தலைமை விருந்தினராக வரவழைத்தமை ஏற்புடையதல்ல என்றும் உருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.