யாழில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டி பாலியல் தொல்லை, பல்கலை மாணவிகளுடன் அத்துமீறும் ஆசாமிகள்..!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லும் பொழுது சில ஆசாமிகள் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடந்த மாதம் 300 மாணவிகளின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் மாணவிகள் மீதான ஆசாமிகளின் பாலியல் தொல்லை தொடர்ந்து வந்தமையால் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பின்புற வீதியூடாக விடுதிக்கு செல்லும் மற்றும் அந்தப் பகுதியில் வாடகை அறைகளுக்கு செல்லும் மாணவிகளையும் இலக்கு வைத்து அங்கு வரும் இளைஞர்கள் தமது அந்தரங்க உறுப்புகளை காட்டுவதுடன் மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் வசை பாடுவதாகவும் மாணவிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பல்கலையுடன் தொடர்புபடாத இளைஞர்களே இவ்வாறு அநாகரிக செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை உந்துருளியில் வந்த இருவர் பல்கலைக்கழக மாணவிகள் இருவரை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர். இது தொடர்பிலும் அவர்களின் உந்துருளி இலக்கத்துடன் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து காவல்துறையினரின் கண்காணிப்பு அந்த பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.