யாழில் வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு நேற்று (22) மாலை சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்பகுதியில் மதுபோதையில் இருந்த 10 இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து சிரமத்துடன் தப்பிச்சென்ற இருவரும் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை காவல்துறையினர் 10 இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் 10 இளைஞர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.