ஈரான் தாக்குதலின் இரகசியம் : கசிந்த முக்கிய உளவுத் தகவல் - அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் கசிந்ததால் அமெரிக்க நிர்வாகம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த உளவுத்துறை மதிப்பீடு கசிவை, ஒரு தேசத்துரோக செயல் என்று தெரிவித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மூர்க்கத்தனமானது இது துரோகமானது, இவ்விடயம் விசாரிக்கப்பட வேண்டும்.


இதற்கு யார் பொறுப்பானவர்களோ அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானில் ஏற்பட்ட அனைத்து சேதங்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும் அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் முழுதாக அழிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக - ஃபோர்டோவில் 12 பதுங்கு குழிகள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்காவின் B-2 இராணுவ விமானங்கள் தாக்கின.


இருப்பினும், அந்த தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆயுதங்கள் அழிக்கப்படவில்லை என ஈரான் உட்பட பல்வேறு தரப்புக்களில் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அமெரிக்க தரவுகளை மேற்கோள்கட்டி ஈரான் தாக்குதல் திட்டம் வெற்றி அடையவில்லை என பல்வேறு சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


இந்நிலையில், தனது சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் இது தொடர்பிலான பதிவு ஒன்றையிட்டு காணொளி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.


குறித்த பதிவில், நாங்கள் ஃபோர்டோவில் 12 பதுங்கு குழிகளை வெடிகுண்டுகளால் தாக்கினோம்.

இந்த தாக்குதலில் ஈரானிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, ஏதோ ஒரு வகையில் நாம் இலக்கை அடையவில்லை என்பதை போன்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் அபத்தமானவை என குறிப்பிட்டுள்ளார்.