மீனவ சங்கத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சகா : முல்லைத்தீவில் பெரும் சர்ச்சை

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 24ஆம் திகதியன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு - கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு மீனவ சங்கத் தலைவர் செபஸ்ரியாம்பிள்ளை சுகிர்தன் கடற்றொழில் அமைச்சருடன் வருகைதந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்ட கேப்பாப்புலவு மீனவசங்கத் தலைவரை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

 கடற்றொழில் அமைச்சரும் அவருடைய சகாக்களும் மக்களோடு எவ்வாறு அணுகுவது என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டுமெனவும், இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிகமகமுடியாதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
 
இங்கு வருகைதந்து இவ்வாறு அட்டகாசம் செய்த கடற்றொழில் அமைச்சருக்கும், அமைச்சரின் சகாக்களுக்கும் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் வாழ்கை வரலாறு தெரியாதென நினைக்கின்றேன்.

இங்குள்ள மக்கள் எவ்வாறு உறுதியாகவும், திடமாகவும் தமிழ்த்தேசியம் சார்ந்து நிற்பவர்கள் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அமைச்சரும், அவருடைய சகாக்களும் தாக்கிவிட்டுச் செல்கின்ற அளவிற்கு கேப்பாப்பிலவு மக்கள் கோழைகள்அல்ல. நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்பதற்காக மரியாதை நிமித்தம் இப்பகுதியிலிருந்து அவர்களை திரும்பிச்செல்ல அனுமதித்திருக்கின்றனர்.

இவ்வாறான அடாவடித்தனங்களுடன் இங்குவந்து செயற்படமுடியாது என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.

மக்களுடன் மக்கள் பிரதிநிகளாக, உரியமுறையில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அணுகவேண்டும். இவ்வாறு அடாவடித்தனமாக செயற்படக்கூடாதென்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்
.

இதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில்  கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரிடம் வினவிய போது அதனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.