போதைக்கு அடிமையாகிவரும் பாடசாலை மாணவிகள்!


பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

குறிப்பாக போதைக்கு அடிமையான குழந்தைகளை காப்பாற்ற போராட வேண்டும். இல்லையென்றால் நமக்கு ஒரு நாடு இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர்,

“போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளது.

13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பாவனையால் அனாதை இல்லங்களில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் பலர் சிறுவர் உரிமை மீறல் வழக்குகள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று அவசியம்” எனத் தெரிவித்திருந்தார்.