விசேட அதிரடிப்படையின் சீருடையில் பாடசாலை மாணவர்கள்! தையல்காரர் கைது


காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கெடட் குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த விசாரணையானது நேற்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்து அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்த மாணவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயன்படுத்திய அதே துணியினையே பயன்படுத்தி சீருடையை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சீருடைகள் தைக்கப்பட்ட அநுராதபுரத்தில் உள்ள துணிக்கடையின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மாணவர்கள் சீருடை அணிந்திருப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சீருடை தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை கேடட்களுக்கு இரண்டு செட் அங்கீகரிக்கப்பட்ட சீருடைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவம் அல்லது சிறப்புப் படைகளின் சீருடைகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இது தவறான முன்னுதாரணமெனவும் இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.