மீண்டும் நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம்

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.08.2023) இடம்பெற்ற கூட்டத் தொடரிலேயே சரத் வீரசேகர தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகை தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமை பௌத்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்து வந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.