சிங்களவர்களின் இருமுகத்தை வெளிப்படுத்திய அரசியல்வாதிகள்


இலங்கையில் அண்மைக்காலத்தில் உயிரிழந்த இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் சிங்கள மக்கள் இருவேறு விதமான உணவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமகால ஆளும் கட்சியில் முக்கிய பங்கு வகித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோர விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி 31ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்

48 வயதான நிஷாந்தவின் மரணம் குறித்து சிங்களர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலிக்கு பதிலாக மகிழ்ச்சியான பதிவுகளை இட்டனர். சில இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

மிகவும் பணக்காரரான நிஷாந்த கட்டப்பஞ்சாய்த்து உட்பட பல்வேறு சமூக சீர்கேடு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

குறிப்பாக கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் பிரதான நபராக இவர் செயற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக மக்கள் நிஷாந்த மீது கடும் கோபத்தில் இருந்தனர். அதேவேளை ராஜபக்ஷர்களின் பினாமியாகவும் செயற்பட்டு வந்திருந்தார்.

எனினும் நேற்றையதினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித்த தேவரப்பெரும தொடர்பில் தமிழ், சிங்கள மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் நல்லதொரு மக்கள் தலைவன் இழந்துள்ளதாக பலரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இனங்களை கடந்து மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாக மட்டுமன்றி, சிறந்த மனிதனாகவும் அவர் வாழ்ந்திருந்தார்.

கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் களுத்துறை பகுதியில் அவர் ஆற்றிய பணிகள் விலைமதிப்பற்றதாகும். வீதி வீதியாக அலைந்து மக்களுக்கு உணவு வழங்கியிருந்தார்.

அரசியல்வாதி என்ற விம்பத்தை களைந்து, மக்கள் சேவகன் என்பதை பாலித்த நிரூபித்திருந்தார். எனினும் கடந்த தேர்தலின் போது மக்களால் அவர் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 63 வயதில் நேற்றையதினம் மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

மக்களுக்கான அரசியல்வாதி எப்படியிருக்க வேண்டும் என அனைவருக்கும் வெளிப்படுத்திய நிலையில் அவர் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார் என சிங்கள மக்கள் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.