விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவி எடுத்துள்ள சபதம்

அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவரால் வெற்றிடமான அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், அது குறித்து பரிசீலிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் சார்ஜன்ட் அனுராதா ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சாமரி பிரியங்கா பெரேரா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சாமரி பிரியங்கா பெரேரா,

“எனது கணவர் புத்தளம் மாவட்டத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றினார். அவரிடம் அடைக்கலம் தேடி வந்த எவரும் வெறுங்கையுடன் சென்றதில்லை.

அவருக்கு நேர்ந்த அனர்த்தத்தை என்னாலும் எனது பிள்ளைகளாலும் நம்ப முடியவில்லை. கனவு போல் உள்ளது. அவரது மரணத்தின் சூடு தனிவதற்குள் நான் அரசியலில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படியான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் என்னிடம் யாரும் கேட்கவில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன் என இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவில்லை. கணவரின் அரசியல் விவகாரங்களை கவனித்துக்கொள்கிறேன் என்ற ரீதியிலும், அவருடைய தனிப்பட்ட செயலாளராக செயல்பட்டேன்.

அரசியலுக்கு வரும் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இடத்தில் நின்று மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு புத்தளம் மாவட்ட மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் என்னைக் கேட்டால், அதுபற்றி நான் சிந்திக்க வேண்டி வரலாம்.

எனது நான்கு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இப்போது உள்ளது. எனக்கு நல்ல வேலையும் நல்ல தன்னம்பிக்கையும் இருக்கிறது.

நான் தனியாக இல்லை என்ற உணர்வுடன் எதிர்காலத்தை எதிர்கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்தாலும் என் கணவர் செய்த அரசியலை நான் செய்ய வேண்டியதில்லை. சிலர் அவரை விமர்சித்தாலும், அவர் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு அரசியல்வாதி.

பெரும்பாலான நாட்களில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். என் கணவரைச் சுற்றி நிறைய பேர் இருந்தார்கள். அதுதான் அவருடைய பலம்.

எனது கணவர் புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான மக்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளை கட்டி கொடுத்தார். வீடற்றவர்களுக்கு 10,000-15,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்த எனது கணவரின் உடலை வைக்க ஒரு இடம் இல்லாமல் போனது.

இறுதியில், தற்காலிகமாக கட்டப்பட்ட இடத்தில் இறுதிச் சடங்குகள் கூட செய்ய வேண்டியிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளுக்கு நான் தலைமை தாங்குகிறேன். பெண்களின் வலி எனக்குத் தெரியும். இன்று இச்சம்பவத்தினால் நானும் பொலிஸ் சார்ஜன்ட் அனுராதாவின் மனைவி லக்சிகா பிரசாதினியும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.

அவரை நான் கைவிட மாட்டேன். தேவையான அனைத்தையும் செய்வேன்” என சாமரி பிரியங்கா பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.