சஜித்தின் கருத்து : ரத்தம் சிந்த தயார் என்கிறார் மேர்வின் சில்வா

 

நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு ரத்தம் சிந்த தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் வெளியிட்ட கருத்து குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச 13 வழங்குவோம் என கூறுகின்றார். 13-ல் எதனை அவர் வழங்கப் போகின்றார்? காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது.

பொலீஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தான் உயிருடன் இருக்கும் வரை எவருக்கும் வழங்குவதற்கு இடம் அளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு யாரேனும் வழங்கினால் ரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணசிங்க பிரேமதாச லோரி கணக்கில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் எனவும் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அது குறித்து தாம் பேசப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.