கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ரஷ்ய கப்பல்: தயங்கும் இலங்கை

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 35 டொலர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு விற்பனை செய்ய ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேரடியாக இலங்கைக்கு மசகு எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா இணங்கியுள்ளது.

மேலும், 90000 தொன் எடையுடைய மசகு எண்ணெய் தாங்கிய ரஷ்ய கப்பலொன்று சில வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பலுக்கு 72.6 மில்லியன் டொலர்களே செலுத்த வேண்டும் எனவும் இது லாபகரமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரையில் அதிகாரபூர்வமாக ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வது குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

டுபாய் நிறுவனமொன்றின் ஊடாக ரஷ்ய மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய இலங்கை எரிசக்தி அமைச்சு முயற்சித்துள்ளது.

இந்த டுபாய் நிறுவனத்துடன் இலங்கை அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமான வர்த்தகருக்கு சொந்தமானது என தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நேரடியாக எரிபொருள் விநியோகம் செய்ய ரஷ்ய தூதுவர் அண்மையில் இணக்கம் வெளியிட்ட போதிலும் இதுவரையில் இலங்கை அரசாங்கம் அதற்கு உரிய பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.