உக்ரைன் போர் நிறைவடையவில்லை..! கொடூர ஆயுதங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப் போரில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை 5 மணிக்கு ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டது என்றும் மேற்குக் கரையில் இராணுவ உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த பின்வாங்குதலை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் கெர்சன் நகரத்தின் மையத்தில் குடியிருப்பாளர்களால் உக்ரைனிய கொடி ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா இன்னும் அதன் முழு ஆயுதங்களையும் உக்ரைன் மீது பயன்படுத்தவில்லை என்றும், உக்ரைனில் சாத்தியமான அனைத்து எதிரிகளின் இடங்களையும் ரஷ்யா தாக்கவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ரஷ்யா புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ரஷ்ய நிலத்தை மீட்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அவருடைய டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைனில் ரஷ்யா இன்னும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று அர்த்தம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2008 மற்றும் 2012 க்கு இடையில் ரஷ்ய அதிபராகவும், 2012 மற்றும் 2020 க்கு இடையில் ரஷ்யாவின் பிரதமராகவும் டிமிட்ரி மெட்வடேவ் பணியாற்றினார்.

இவர் தற்போது ரஷ்ய அதிபர் புடினின் கீழ் நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.