கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்ட பரபரப்பு - இளைஞரை கொடூரமாக தாக்கிய அரச அதிகாரிகள்

கொழும்பு வன் கோல்பேஸ் வளாகத்தில் பீட்சா பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கொடூரமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன் கோல்பேஸ் கட்டத்தின் 6வது மாடியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தலைமைச் சமையல்காரர் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன் ஹெல்மெட்டை மேசையில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த கலால் அதிகாரிகள் ஹெல்மெட்டை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் அப்போது கலால் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவன தலைமைச் சமையல்காரர் மற்றும் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, தலைமை சமையல்காரர் மற்றும் நிறுவன மேலாளர் ஆகியோரை கலால் அதிகாரிகள் தாக்கியுள்ளனர். மற்றுமொரு கலால் அதிகாரிகள் குழு வந்து ஊழியர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி. இந்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மேலும், பிரதான சமையல்காரர் மற்றும் கலால் அதிகாரி ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.