வல்வெட்டித்துறையில் உணவக உரிமையாளருக்கு 21,000 ரூபா தண்டம்...!

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  விசாரணை  இன்றையதினம்(22)  இடம்பெற்றதை தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்க கூடிய வகையில் உணவகத்தை நடாத்தியமை உட்பட 07 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 21,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.

அதேவேளை, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் கடந்த மாதம் 05 ஆம் திகதி  தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது,  இம்மாதம் 16 ஆம் திகதி விசாரணை இடம்பெற்றதை தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்க கூடிய வகையில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது என்பதுடன் மேற்குறித்த வழக்கானது இன்றைய தினம் மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுச்சுகாதார பரிசோதகரினால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததுடன் வழக்கானது கட்டளைக்காக மார்ச் 07 அன்று திகதியிடப்பட்டது.