கோட்டாபயவை கைது செய்யுமாறு கோரிக்கை..!சிங்கப்பூர் அரசு பதிலடி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா ஜனாதிபதி லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை என்பதும் கோட்டாபய மீது இலங்கை அரசும், இன்டர்போல் அமைப்பும் எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டபாய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.

மாலைத்தீவிலும் கோட்டாபயவின் வருகையை கண்டித்து கடும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப்பூர் சென்ற கோட்டபாயவுக்கு சிங்கப்பூர் அரசு 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியது, அது முடிவடையும் தருவாயில் மேலும் 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறும் அவர் புரிந்த குற்றங்களுக்காக கைது செய்யுமாறும் வலியுறுத்திய நிலையிலேயே சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் அதனால் அவரை கைது செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு விளக்கியுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 63 பக்கங்கள் கொண்ட முறைப்படை முன்வைத்து சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

சிங்கப்பூர் ரீபோர்ம் (Reform) கட்சியின் தலைவர் கென்னத் ஜெயரட்னமும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது உறவினர்களைக் கொன்றதாக சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு முறைப்பாடு அனுப்பியிருந்த போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

 இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.