நீக்கப்பட்டது தடை: இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த தினத்திற்கு முன்னர் கோவிட் - 19இற்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, பொது மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே ஏப்ரல் 30ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கைவசம் வைத்திருப்பதை கட்டாயமாக்கும் வகையிலும், அவ்வாறு முழுமையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.