நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க (Dhanushka Parakramasinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் (Colombo) இன்று (29) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே தனுஷ்க பராக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை ஜூலை 1ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு கணிசமான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும் தனுஷ்க பராக்கிரமசிங்க சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            