அரச அடக்குமுறைகள் தொடர்பில் பதிலளிக்க மறுத்த ரஞ்சன்!


சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சிறிலங்கா அதிபரின் பொது மன்னிப்பில் விடுதலையான பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறையில் இருந்து விடுதலையானதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அடக்குமுறை குறித்த கேள்விக்கு சிறிது மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க கருத்துகள் எதனையும் வெளியிட விரும்பாமல் மழுப்பலான பதிலை வழங்கியுள்ளார்.

மேலும் அந்த ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் குறித்து உங்கள் கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு சில நொடிகள் மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க, உங்கள் கேள்வியை செவி மடுக்கையில் சரியான பதில் ஞாபகத்திற்கு வருகின்ற அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்தார்.

எனினும் மழுப்பலான பதில் ஒன்றை தான் வெளியிட நினைப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை ஐஸ்கிறீம் விற்பனையாளரைப் போன்று ஒரு மழுப்பலான பாதகமில்லாத பொய்யான பதிலை வழங்கும் எண்ணமொன்று ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அது தான் இரண்டாவதாக தெரிவிக்க நினைத்த பதிலைவிட பொய்யான ஒன்றாக அமையும் எனவும், ஆகவே இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ, செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.