ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்: ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க கரணவக்க தெரிவித்துள்ளார்.

1965 ஆம் ஆண்டு பிறந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மின் பொறியியலாளர் ஆவார்.

2007 ஆம் ஆண்டு தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சராகவும் பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பின்னர் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும் பணியாற்றினார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் போது திறமையான அமைச்சராக அவர் தனித்து நின்றதுடன், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உயர் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.

தேசிய ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவராக செயற்பட்ட இவர் தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் எனவும் ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரியாக முன்வைக்கப்பட வேண்டிய பலம் வாய்ந்த வேட்பாளர் சம்பிக்க என அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக் சமூக ஊடகங்களில் சமூக ஊடகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் 

எனினும் ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதற்கான தீவிர முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ரணிலுக்கு நெருக்கமான நண்பரான சகால ரட்நாயக்க தற்போது வகிக்கும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரணிலில் தேர்தல் பிரச்சார குழுவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.