ஈரான் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் அஞ்சலி, ஈரான் தூதரகத்துக நேரடியாக சென்ற ரணில்



ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்து ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்த கடைசி அரச தலைவர் ஈரான் ஜனாதிபதி என்பதை நினைவு கூர்ந்த பிரசன்ன ரணதுங்க, உமா ஓயா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஈரானின் ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை நினைவுகூர்ந்த அமைச்சர், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி அனுதாபத்தை தெரிவிக்கும் யோசனையை முன்வைத்தார்.


அதன்படி, சபாநாயகர் உள்ளிட்ட ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்களது ஆசனங்களில் இருந்து எழுந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தியதை அடுத்து, சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இதேநேரம் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது.

இதேநேரம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி ஈரான் விஜயம் செய்துள்ளார்.

ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனியிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரங்கல் செய்தியை அமைச்சர் அலி சப்ரி கையளிக்கவுள்ளார்.

இலங்கையுடனான நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், மறைந்த ஈரான் ஜனாதிபதியும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரும் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது