நாடு திரும்புவது தொடர்பில் கோட்டாபயவுக்கு ரணில் எச்சரிக்கை: வெளியாகிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருப்பதாகவும், நாடு திரும்பும் திட்டம் பற்றி அவர் எதனையும் கூறவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்து உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகள் உயர்வடைந்ததால், பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக ஜூலை 14 அன்று, மாலத்தீவில் இருந்து விமானத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

​​இந்நிலையில் சிங்கப்பூர் அரசு கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கியிருந்தது.

வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு முடிவடையும் தருணத்தில், மேலும் 14 நாட்களுக்கு பயண அனுமதிச் சீட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நீடிக்கப்பட்ட 14 நாட்கள் முடிவடையும் தருணத்தில் கோட்டாபய நாடு திரும்புவார் என எதிர் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கருத்து ரணில் தெரிவிக்கையிலேயே, நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் என தாம் கருதவில்லை எனவும், நாடு திரும்புவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியதன் காரணமாக தாம் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும், அதிர்ஷ்டம் காரணமாகவும் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.