தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்: வஜிர அபேவர்தன விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024இல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்ரமசிங்க தேசத்தை நடத்த அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வஜிர அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார். இதனை தான் நகைச்சுவைக்காகக் கூறவில்லை.

ஜனாதிபதி ரணில் ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.