நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் ரணில்-ரணிலுக்கு ஆதரவளிக்கும் பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும் நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்ற ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அடிப்படைக் கொள்கைக்கு இது ஒரு சவால் என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

இருப்பினும் புதிய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் திறமைகளை கருத்திற்கொண்டு அவர் நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் என அவர்கள் கருதுவதாக அவர் கூறினார்.


நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.