கோட்டாபயவின் பாணியை பின்பற்றும் ரணில்: முஸ்லிம் நாடுகளை பகைவர்களாக்கும் முயற்சி

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஸ தேர்தல் வாக்குகளுக்காக எவ்வாறு செயற்பட்டாரோ அதேபோலவே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்‌ஸ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கவில்லை.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார். ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார், நாட்டில் பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது.

சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.