பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் 56 வயதுடைய ரங்கசாமி கனகநாயம் இன்று (05) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 டிசம்பர் 25 ம்திகதி மட்டு தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ரங்கசாமி கனகநாயம் மற்றும் பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனினும் 2019 ம் ஆண்டு குறித்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், மட்டக்களப்பில் வசித்து வந்த கஜன் மாமா எனப்படும் ரங்கசாமி கனகநாயம் இன்று(5) அதிகாலை 1 மணியளவில் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.