சிறிலங்கா கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்! இடித்துரைக்கும் ராமதாஸ்


தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது, இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டது பற்றிய வேதனையை பகிர்ந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் கச்சத்தீவையொட்டிய இந்தியக் கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியிருந்தார்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக கடற்தொழிலாளர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர், அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

தவிரவும், கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது, அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 கடற்தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர்.

அதற்கிடையில், மேலும் 23 கடற்தொழிலாளர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது, இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது, அதனால் தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது.

எனவே, தமிழக கடற்தொழிலாளர்களும் இந்தியகடற்தொழிலாளர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்தொழிலாளர்கள் தமிழக அரசு இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது