எங்களின் கடலில் இந்தியமீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழரை காட்டிக்கொடுத்த ஈபிடிபியின் நபரை கடற்றொழில் அமைச்சராக வைத்துக்கொண்டு, விரலால் கண்ணைக் குத்தும் வேலைகளை அரசாங்கம் செய்கின்றது.
வெளிப்படையாகவே இவ்வாறாக கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் அவ்வாறு நடந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணி திரட்டி போராடுவோம் என்றார்.