கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை தனக்கு தெரியும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினர், மைத்திரிபாலவை நேரில் சந்தித்து அவரிடம் யார் அந்த சூத்திரதாரி என்ற கேள்வியை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவரின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வீதித்தடைக்கு முன்னால் மறிக்கப்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடமும் ஊடகங்களிடமும் கருத்துக்களை முன்வைத்ததையடுத்து பின் கலைந்து சென்றனர்.
இருப்பினும் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பினர் தெரிவித்திருந்துள்ளனர்.
இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் பதில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை வரும் 29ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.