களுத்துறையில் பயங்கரம்: சிறைக்கைதி அடித்துப் படுகொலை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கைதி கடும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (26.12.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த கைதி கரவிட்ட, மொல்காவ பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஜி. சுனில் என்ற 46 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைதி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் நேற்றுமுன்தினம் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர், களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு அறிவித்தார் எனவும், அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், உயிரிழந்த கைதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறைக் காவலர்களா அல்லது சக கைதிகளா என்ற தகவலைப் பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை