கொலையாளி நீதிமன்றினுள் ஏற்கனவே இருப்பதை அறிந்திருந்த சிறைச்சாலை அதிகாரிகள் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 
கொழும்பு குற்றப்பிரிவு இதுவரை நடத்திய விசாரணைகளில், புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமையானது, அன்றைய தினம் பாதுகாப்பு வழங்க வந்த சிறை அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குழுவின் அறிவுறுத்தலுடன் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவரது பாதுகாவலராக செயல்பட்ட பிரதான சிறைச்சாலை அதிகாரியை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

இதற்கமைய நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாளில் அவருக்கு பாதுகாப்பு அளித்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி பதிவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நாளில், அவர் புதுக்கடை நீதிமன்றத்தின் 9 ஆம் எண் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் 2 ஆம் எண் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகள் அவரை மண்டபம் எண் 05 க்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் பாதாள உலகக் கொலையாளி மண்டபம் எண் 05 இல் இருப்பதை சிறை அதிகாரிகள் முன்பே அறிந்திருந்ததாகவும், சஞ்சீவவை அந்த மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை மற்றும் பாதுகாப்புப் படையினர் குழுவின் சில அதிகாரிகள்  விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.