சிறுமி துஷ்பிரயோகம்-பெற்றோர் தாக்குதலில் படுகாயமடைந்த பூசாரி


புத்தளம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பூசாரி ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வில்பத்த வில்லு பிரதேசத்தில் கோவில் ஒன்றை நடத்தி வரும் பிரபலமான பூசாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வசித்து வரும் 12 வயதான சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சிறுமி சுகவீனமுற்று இருந்த காரணத்தினால், தாய், சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு மந்திரிக்க வேண்டும் எனக்கூ றி தாயை வெளியில் இருக்குமாறு கூறி விட்டு, சிறுமியை கோவிலுக்குள் அழைத்துச் சென்று மந்திரித்துள்ளார்.

வீட்டுக்கு சென்றதும் கோவிலில் நடந்ததை கூறிய சிறுமி

இதன் பின்னர் சிறுமி மேலும் மந்திரத்தின் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் பாதுகாப்புக்காக யந்திரம் அணிவிக்க வேண்டும் என்று கூறி தாயையும் சிறுமியையும் அனுப்பி வைத்துள்ளார்.

சிறுமி வீட்டுக்கு சென்ற பின்னர், கோவிலில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த தாயும் தந்தையும் கோவிலுக்கு சென்று பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பள்ளம் பொலிஸார் பூசாரியை கைது செய்துள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பள்ளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.