தேர்தல் பிரசாரம் நள்ளிரவுடன் நிறைவு : ஒரே நாளில் அதிரப்போகும் தென்னிலங்கை


 எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதன்படி இன்றையதினம் மட்டும் பிரமாண்டமான 11 பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தென்பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று நள்ளிரவுக்கு பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது அல்லது ஊக்குவிப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதன்படி சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) மாத்தறை, காலி, களுத்துறை, ஹோமாகம மற்றும் மருதானை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள மூன்று கூட்டங்களில் உரையாற்றவுள்ளார். இறுதி கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), காலி, பேருவளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய இடங்களில்நடைபெறவுள்ள பேரணிகளில் பங்கேற்கவுள்ளார். அவரது இறுதி பிரசாரம் கொழும்பு டவர் ஹோலுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) களுத்துறை, கம்பஹா மற்றும் நுகேகொட ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பேரணிகளில் உரையாற்றவுள்ளார். நுகேகொடையில் நடைபெறும் பேரணியுடன் அவரது பிரசாரம் நிறைவடையும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) திஸ்ஸமஹாராம மற்றும் மத்துகமவில் நடைபெறும் பேரணிகளில் உரையாற்றவுள்ளார். அவரது இறுதி பிரசாரம் பிலியந்தலையில் நடைபெறவுள்ளது.   

இன்று பிரசாரம் களைகட்டவுள்ளதால் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.