சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.

அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் வேட்பாளர்கள் எவரும் அந்த பதவியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிபர் முறைமையில் நன்மை தீமைகள் காணப்படுவதாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அதிபரை நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டங்களை நிறைவேற்றுவது அவசியம் என தெரிவித்த அவர், அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் புதிய சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் அதிபரின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு பிரிக்கப்படும் என்றும் அதிபர் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.