கோட்டாபய நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியற்றவை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட அதிபர் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் செல்லுபடியற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (25) தீர்ப்பளித்தது.

08.01.2015 தொடக்கம் 2019 அதிபர் தேர்தல் திகதி வரையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பாரதூரமான பாரபட்சத்துக்கு உள்ளாகியுள்ளதால் அவற்றை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதேவேளை அதிபர் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பான மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிட்டப்பட்டிருந்தனர்.

இதன்போது,  அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் சார்பில், விதானபத்திரன சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன, அதிபர் சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, அதிபர் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.