தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் அறிவிப்பார் - எஸ்.எம்.மரிக்கார்

 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை மே மாதத்தின் பின்னர் அறிவிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னரே தகவல்களை அறிந்திருத்தால் அவர் அந்த தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைத்திருந்தால் அது தண்டனை சட்டக்கோவையின் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள அவர் தற்போது நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்கத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிக்க முடியுமெனில், ஏன் நீதிமன்றத்திலும் வாக்குமூலமளிக்க முடியாது? அவரால் நீதிமன்றத்துக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது இவ்வாறிருக்க மறுபுறம் அரசாங்கம் வரிகளை அதிகரிப்பதை மாத்திரமே தமது வருமான மூலமாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 600 பில்லியன் ரூபா வருமான இலக்கிலேயே வட் வரி அதிகரிக்கப்பட்டது.
 ஆனால் இந்த எதிர்பார்ப்பினை விட வருமானம் அதிகமாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அவ்வாறெனில் ஏன் மக்களுக்கு வரி விலக்கினை வழங்க முடியாது? ஆனால் நிரந்த சேமிப்புக்களுக்கான வட்டி மாத்திரம் குறைக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் நிறைவுக்கு கொண்டு வந்து மக்கள் சார்பான அரசாங்கத்தை நாம் தோற்றுவிப்போம். மே மாதத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை அறிவிப்பார். மே தினத்தன்று ஐக்கிய மக்கள்சக்திக்குள்ள மக்கள் ஆதரவைப் பார்த்ததன் பின்னர் அவர் தனது தோல்வியை உணர்ந்து கொள்வார். சம்பிரதாய மே தினக் கூட்டங்களுக்கு அப்பால் சென்று, வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்திக் காட்டுவோம் என்றார்.