பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்குத் தேவையான நிதி நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குமாறும் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அனைத்து பிரதேச செயலாளர்களும் அமைச்சுக்களும் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் நிவாரணம் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலத்த காற்று மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, காலி, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கண்டி மற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 52 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 15,404 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (16) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான காலநிலை காரணமாக நாடு முழுவதும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 05 வீடுகள் முழுமையாகவும் 193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,927 பேர் நாடளாவிய ரீதியில் 21 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் எனவும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்காவிடின் 117 என்ற அனர்த்த நிவாரண சேவையின் துரித இலக்கத்தை அழைக்குமாறும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வலியுறுத்துகின்றார்.