முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதித்தால் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனி நபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஊடகங்களுக்கு கூட்டாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில், 

“பொதுவாக இது நல்ல செய்தி என்று தான் நாங்கள் எண்ணுகின்றோம். பொருளாதார ரீதியாக உதவிகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் சிலர் மீதான தடையை ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார் என்றும் நாங்கள் எண்ணலாம்.

இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ரணில் அரசாங்கம் வழங்க முன்வந்தால் தான் அவர்கள் எதிர்பார்க்கின்ற புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளும், பொருளாதார நெருக்கடியையும் நிவர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கும் என்று கருத வேண்டும்.

அதேவேளை, ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தொடரும் தடையை நீக்க ரணில் அரசாங்கம் முன்வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

“சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் சிலர் மீதான தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளமையை வரவேற்கின்றோம்.

இன்னும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தனி நபர்களின் பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகின்றன.

புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த வழி

அந்தத் தடையையும் நீக்குமாறும் நாம் ரணில் அரசாங்கத்திடம் கோருகின்றோம். முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்தத் தடையை நீக்குவது அவசியமாகும்.

இதைக் கருத்தில்கொண்டு ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களின் பெயர்களையும் தடைப்பட்டியலில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் கோருகின்றோம்”  எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் புளொட்டின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

“புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பலர் மீதான தடையை கடந்த நல்லாட்சி அரசாங்கம் நீக்கியிருந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம், மீண்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீது தடையை விதித்திருந்தது.

தொடர்ந்தும் தடையில் இருக்கும் அமைப்புக்களை கவனமெடுக்க கோரிக்கை

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தத் தடையை நீக்கியுள்ளார். எல்லோருக்கும் இல்லாவிடினும் சில முக்கிய அமைப்புக்கள் மற்றும் முக்கிய நபர்கள் சிலர் மீதான தடையை நீக்கியுள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம்.

இதேவேளை மேலும் சில அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் சிலர் மீதான தடை இன்னமும் தொடர்கின்றது. இதனை ரணில் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளும், உதவிகளும் இலங்கைக்கு வர வேண்டும் என்று ரணில் அரசு எதிர்பார்க்கின்றது.

ஆகவே, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்கள் அல்லது அங்கு அமைப்புக்களூடாக மக்களுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தடையில் இருந்தால் தாம் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது என்ற காரணத்தால் இந்தத் தடையை ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.