இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் முதல் - 3 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்தது. கடந்த வருடம் முதன்மைக் கணக்கில் உபரியைப் பெற முடிந்தது.

 இதன்மூலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வரி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இதேவேளை எதிர்காலத்தில் வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. இதற்கான நடைமுறைகள் சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.