அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை பாரதூரமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.பி.பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தில் ஏஇ 692018 இலக்க வழக்கில் 2025.05.02 ஆம் திகதியன்று தண்டனைச் சட்டக்கோவை 386 பிரிவின் பிரகாரம் அதுல சேனாரத்ன என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருக்கு 2025.05.12 ஆம் திகதி வெசாக் தினத்தன்று ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பாரதூரமானது.
பொதுமன்னிப்பு வழங்கும் போது அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் பலமுறை தீர்ப்பளித்துள்ள நிலையில் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்து அவருக்கு தண்டப்பணம் விதித்துள்ளது. ஆகவே இந்த பதிவுகளில் இருந்துபாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.